1. புள்ளெலாம் நடை செல்லும் பாதையில் ஒரு புறா தத்தித் தத்தி நடந்ததன் கால்களிலொன்றிலொரு காயம் இடதிலிருந்து வலம் வலதிலிருந்து இடம் கழுத்தைச் சொடுக்கி கால்கள் நொண்டி தரையை ஏனது அளக்கிறது மணிக்கண்களின் வேதனையை ஊரறியத் தந்து விட்டு நொண்டும் கால்களின்கீழ் நகர்ந்தோடும் இரையையும் காணாது மீண்டும் இடதும் வலதும் எப்படி உணர்த்துவேன் இருவருக்குமான சிறகுகளின் தரிசனத்தை ---------------------------------------- 2. இன்னொரு செய்தி இன்று காலை ஒரு பறவை இறந்தது புல்லின் செய்தியை காற்றில் தொகுத்து முடிக்காமல் துடித்துக் கொண்டிருந்த அதன் அலகுகளில் மிச்சமிருந்தது அழகிய பனித்துளி நீவப்படாத சிறகுகளில் மொழியிறந்த அந்தரங்கம் எப்படி பரிமாறும் நாளை மற்றுமொரு இறப்பின் செய்தி --------------------------------- 3. புதிய பண் மஞ்சள் வெட்டிவைத்த மேகக்கூட்டங்களினின்று பொன்னிற சிறகுகளசைத்து மிதந்து திரிந்த அந்த அபூர்வப் பறவை புதியதொரு பண்ணிசைத்துக் கொண்டே சிறகசைப்பை நிறுத்திக் கொண்டது ஏன் கனவே போல் காற்றினூடாக தன் அசையாச் சிறகுடன் மண்ணை விரும்பி வேகத்துடன் வீழ்வதை நான் கண்டேன் கம்பீரத்துடன் ஒயிலாய் அசையும் அதன் பொன்னிறச் சிறகுகளை கீழ்நின்று தாங்கிய காதல் கரைந்து போயின் வேறென்ன செய்யும் அது
Filed under: எழுத்து, சரவணன் அபி Tagged: கவிதை, சரவணன் அபி,
