Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

கவியின் கண்- முதியோர் இல்லம்

$
0
0

எஸ். சுரேஷ்

முதியோர் இல்லம்
– விஸ்லாவா சிம்போர்ஸ்கா

இதோ வந்துவிட்டார் மகாராணி-
நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.
ராங்கிக்காரி நம் ஹெலன்,
முதலில் அவளை யார் ராணியாக்கியது!
உதட்டுச்சாயமும் சவுரி முடியுமாய் வந்து விட்டாள்,
நமக்கென்ன அவளைப் பற்றி அக்கறை,
அல்லது சுவர்க்கத்தில் இருக்கும் மூன்று மகன்களும்தான்
அங்கிருந்து அவளைப் பார்க்கப் போகிறார்களா!

“அவர்கள் போரில் சாகாதிருந்தால்
நான் இங்கிருக்க மாட்டேன்.
குளிர்காலத்தில் ஒரு பிள்ளையிடம் இருப்பேன்,
கோடையில் இன்னொருவனிடம் இருப்பேன்.”
அவள் எப்படி இவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாள்?
நானும்தான் செத்திருப்பேன்,
அவள் என் அம்மாவாய் இருந்தால்.

அவளது கேள்விகளுக்கு முடிவேயில்லை
(“உன் விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை”),
உயிரோடுதானே இருக்கிறார்கள், ஆனால்,
ஏன் உன் பிள்ளைகளும் பெண்களும்
உன்னை ஒரு வார்த்தைகூட விசாரிப்பதில்லை,
“என் பிள்ளைகள் உயிரோடு இருந்தால்,
என் விடுமுறைக் காலங்கள் முழுதும்
மூன்றாம் பிள்ளையுடன் இருப்பேன்”.

ஆமாம், அவன் தன் தங்க ரதத்தில்
இவளைக் கூட்டிப் போக வருவான்.
அதை ஒரு அன்னப் பறவை இழுத்துவரும்,
அல்லது அல்லி மலர் வெண்புறா,
அவளை அவன் மறக்கவேயில்லை
என்று எங்களுக்குக் காட்ட வரப்போகிறான்,
அவன் தன் தாய்ப்பாசத்துக்கு எவ்வளவு
கடன்பட்டிருக்கிறான் என்று காட்டப்போகிறான்.

தன் பழைய பல்லவியை ஹெலன்
மீண்டும் பாடத்துவங்கும்போது,
இங்கு தாதியாய் இருக்கும் ஜேன்,
அவளாலும் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை-
இத்தனைக்கும் ஜேனின் வேலை
எங்களுக்கு ஆறுதலாய் இருப்பது-
திங்கள் முதல் வெள்ளி வரை,
இரு வார விடுப்புடன்.

oOo
விஸ்லாவா மிகவும் சிக்கலான விஷயங்களையும் உரையாடுவது போல் எளிமையாகவும், அப்பழுக்கில்லாத தெளிவுடனும் பேசுவதை நாம் இந்த தொடரில் பார்த்தோம். இதுவரை நாம் பார்த்த கவிதைகளே திகைக்க வைக்கின்றன, அவற்றில் இன்னொன்று.

முதுமையையும் அதனுடன் தொடரும் பிரச்சினைகளையும் நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இந்தக் கவிதை எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை போலிருக்கிறது. இதில் விஸ்லாவா முதுமையடைந்தவர்களின் மனதையும், அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களின் மனதையும் ஒரே சமயத்தில் புரிந்து கொள்கிறார்.

எப்படிப்பட்ட சமூகமாக இருந்தாலும் பிள்ளைகள் தம் பெற்றோரை வயதான காலத்தில் இப்படி நடந்த வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நம் சமூகத்தில் வயதான பெற்றோர் தம் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் கடமை இளைய தலைமுறைக்கு உரியது. ஆனால் மேற்கத்திய சமூகங்களில் முதுமை இல்லங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கிருக்கும் பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பார்த்து வர வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது முடியாதபோது போனில் அழைத்தாவது பேச வேண்டும். எதிர்பார்ப்புகள் வெவ்வேறானவை என்றாலும், பிள்ளைகள் தம் அன்பை பெற்றோருக்கு ஒரு அக்கறையாக வெளிப்படுத்துவது மிக முக்கியமாக இருக்கிறது.

இந்தக் கவிதையில் நாம் ஹெலனைப் பார்க்கிறோம். அவர் ஒரு மகாராணி, அவர் தன்னையே அந்தப் பதவியில் நியமித்துக் கொண்டிருக்கலாம். அவர் பிறர் விவகாரங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். மற்றவர்களின் பிள்ளைகள் ஏன் அடிக்கடி வந்து பார்ப்பதில்லை என்று கேட்கிறார். அவரது மகன்கள் மூவரும் போரில் இறந்து விட்டார்கள். இந்த இடத்தில் விஸ்லாவா முதியோர் இல்லம் போன்ற இடத்தல் நிலவும் சிக்கலான உறவுகளைப் பேசுகிறார். அதே சமயம் சமூக எதிர்பார்ப்புகளையும் குறிப்பிடத் தவறுவதில்லை. அவளது மகன்கள் இறந்து போனது, ஹெலனுக்கு சுதந்திரம் தந்திருக்கிறது. இப்போது அவர் தான் விருப்பப்பட்ட கனவில் நம்பிக்கை வைக்க முடிகிறது- என் மகன்கள் என்னை எப்படியெல்லாம் நேசித்திருப்பார்கள், அவர்களுடன் எப்படியெல்லாம் பொழுதைக் கழித்திருக்க முடியும் என்று பல கற்பனைகளை மெய் போல் நம்புகிறார். அவர்களது இல்லாமை பிறரின் கதியிலிருந்து அவரைக் காப்பாற்றி ஒரு ராணியின் இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. யாருக்கும் அவரைக் கேள்வி கேட்கும் துணிச்சல் இல்லை. ஏன், அங்கு கேள்விக்கே இடமில்லை.

முதியோர் இல்லத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இது எரிச்சலாக இருக்கிறது, காரணம், அவர்களை யாராவது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற ஒரு சமூக கட்டமைப்பு இருக்கிறது. பிள்ளைகள் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர் கார்ணமாகின்றனர். இது முதியவர்களைக் காயப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இங்கே ஹெலன் அது போன்ற கேள்விகளிலிருந்து தப்பித்து விட்டதால் அவர் பிறரது கோபத்துக்கும் பொறாமைக்கும் பாத்திரமாகிறார்.

பொதுவாக நாம், வயது ஏற ஏற மனமுதிர்ச்சி ஏற்படும், வாழ்க்கையைப் புரிந்து கொள்வோம், அமைதியானவர்கள் ஆகி, வாழ்வை அதன் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், இதெல்லாம் ஒரு லட்சியமாகத்தான் இருக்கிறது. செயலில் எதுவும் நடக்கக் காணோம். அனுபவத்தால் பழுத்தவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் பொதுவாக வயதானவர்கள் கசப்பானவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை, சீக்கிரம் கோபப்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன- குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாம் தேவையில்லை என்ற உணர்வு, தம் உடலால் கைவிடப்பட்ட இயலாமை ஆத்திரமாகிறது, பல முனைகளில் சந்தித்த தோல்வி, தம் வயதினரின் வெற்றி (அது ஒரு அநியாயம் என்று நினைக்கிறார்கள்).

இந்தியாவில் முன்னெல்லாம் பல குடும்பங்களில் வயதானவர்கள் எவ்வளவு முதியவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அந்தக் காலத்திலும்கூட முதியவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நவீன நகர வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு, பணம் சம்பாதிப்பவர்கள்தான் முடிவு எடுக்கிறார்கள். முதியவர்கள் பேரன் பேத்தியைப் பார்த்துக் கொள்வதில் ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. வயதான காலத்தில் இது ஏதோ ஒரு வகையில் அவர்களை முக்கியமானவர்களாக வைத்திருக்கிறது. அவர்களையும் நாம் சகித்துக் கொள்கிறோம், கேள்வி கேட்டு தொல்லை செய்வதில்லை. பொதுவாக கேள்வி கேட்பதுதான் முதியவர்களை தொய்வடையச் செய்கிறது, நாமும் கேள்விகளை நிறுத்திக் கொள்வதாயில்லை.

விஸ்லாவா மிகக் சில சொற்களிலேயே முதிவர்களைப் பார்த்துக் கொள்பவர்களின் வாழ்கையைச் சொல்லிவிடுகிறார். என் தந்தையின் நண்பர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நான் அவருடன் மருத்துவமனைக்கு ஒருமுறை போக வேண்டியிருந்தது. அவரது சகா ஒருவர் என்னிடம், “புற்றுநோய் மருத்துவர்களைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார். அவர்கள் எப்போதும் தோற்றுப் போகிறார்கள், ஆனால்கூட அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தாக வேண்டும்,” என்று சொன்னார். இது ஒரு முக்கியமான விஷயம். இவர்கள்தான் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து போராடுகிறார்கள்.

முதியவர்களைப் பார்த்துக் கொள்பவர்களும் அப்படிதான். அது குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது நர்ஸாக வேலை செய்பவராக இருக்கலாம். அவர்கள் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. மரணம் வரை ஒரு முதியவரை கவனித்துவிட்டு அடுத்து இன்னொருவரிடம் அன்பு செலுத்தியாக வேண்டும். இந்தச் சுழலுக்கு முடிவே இல்லை. மகத்தான கவிஞர் மட்டுமே கவனிக்கக்கூடிய விஷயத்தை விஸ்லாவா மிகச் சாதாரணமாகச் சொல்கிறார், “பார்த்துக்கொள்ள வேண்டிய ஜேன்கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லை”. இப்போது ஜேன் உயிர்ப்பு கொண்ட மனிதராகிறார்.

அந்த ஒரு வாக்கியம் ஜேன் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தும் போராட்டத்தை உணர்த்துகிறது. அவருக்காக நாம் வருந்துகிறோம், அவரது வேலை பிறருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கு விஸ்லாவா மிகச் சாதாரணமாக ஒரு உண்மையைச் சொல்கிறார், பிறரைக் கவனித்துக் கொள்பவர்கள் விஷயத்தில் நாம் அக்கறையில்லாதவர்களாக இருக்கிறோம்.

இதுதான் இன்றைய யதார்த்தம். அது மட்டுமல்ல, நம் நாளைய யதார்த்தமும் இதுவாக இருக்கப் போகிறது.


Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், விமரிசனம் Tagged: கவியின் கண்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!