பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி
ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது
வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால்
தனது பின் பக்கத் தலையை எல்லாருக்கும் பழக்குவதற்காக
இவ்வாறு செய்வதாகக் கூறினான்
உடனடியாக ஆச்சர்யத்தை அங்கிருந்து லேசாக நகர்த்தியபடியே
இனி மரங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்ப வேண்டியதிருக்கும்
சட்டையை திருப்பிப் போட்டு அலைய வேண்டியதிருக்கும்
பைக்கைத் திடீரென நிறுத்தி எல்லாவற்றையும்
கழட்டி எறிய வேண்டியதிருக்கும்
எந்நேரமும் எதையாவது பிடித்து இழுக்க வேண்டியதிருக்கும்
வாய்க்குள்ளேயும் கையை விட்டு நோண்டி
ஒன்று ஒன்றாகப் பிய்க்க வேண்டியிருக்கும் பரவாயில்லையாயென
வெறும் சொன்னதற்காகப் போய்
பார்த்தவன் இவ்வளவு பறக்கிறான்
நான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறேனென
பின்னால் திரும்பியவன் பாவம் மிகவும் வருத்தப்பட்டு
பின்னால் கூடி வந்துகொண்டிருந்தான்
↧
பின்னால் கூடி வருதல் –செல்வசங்கரன் கவிதை
↧