“ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர்.
கழுவிக் கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள் கணபதி அக்கா.
“என்னடி மலரு எதுக்கு இப்படி அயம்போடுற?”
“இங்க வந்து உங்க மவன் ச்சங்கரு பண்ற வேலையப் பாருங்க.”
“என்னடி என்ன பண்றான்?”
“காலைல இருந்து நா மாத்தி சரசு, சரசு மாத்தி நான்னு இதுவரைக்கும் 37 தடவ இந்தக் கூலிக்காரன் கதைய சொல்லிட்டான்.”
“ச்சீ இம்புட்டுத்தானா? நாகூட என்னவோ ஏதோ பாம்புதான் வந்துட்டு போலன்னு பயந்துட்டேன்.”
“இம்புட்டுத்தானாவா? அந்தப் பாம்புக்கடியக்கூடத் தாங்கிக்கலாம் போல, இந்தப்பய கடியத் தாங்க முடியல.”
“அக்காளும் தங்கச்சியும் சேந்து எம்புள்ளைய எதுக்குடி கொற சொல்றீங்க? நீங்கதானட்டி போன வாரம் கூலிக்காரன் படம் பாத்துட்டு வந்த புள்ளய கத சொல்லுனு கேட்டீங்க?”
“ஆமாக்கா நாங்க கேட்டதுதான் தப்பாப் போச்சு. போன வாரத்துல இருந்து இதுவரைக்கும் ஓராயிரம் தடவ கத சொல்லிட்டான். காதுல இருந்து ரெத்தமே வந்துட்டு.”
“வரட்டும் வரட்டும் நல்லா வரட்டும்.”
“நல்லாச் சொல்லுவீகளே வரட்டும்னு, நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத் தானத் தெரியும். அந்தா சரசு படுற பாட்டப் பாருங்க கொஞ்சம்.”
இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். சரசின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.
“எக்கா இதாது பரவா இல்ல இப்போ பாருங்க” என்றாள் சரசு.
“ஏ ச்சங்கரு நீ பெரியாளானப்புறம் என்னவா ஆகப் போறல?”
“நானா? நா கூலிக்காரன் ஆகப் போறேன். கூலிக்காரனா ஆகி தப்பு பண்ற எல்லாத்தையும் அடிக்கப் போறேன்” என்றான் ச்சங்கர்.
“அப்படியா? யாரல மொதல்ல அடிப்ப?” என்று கேட்டாள் மலர்.
“எங்கம்மாவத்தான்.”
“யாம்ல?”
“அவங்கதான் என்ன இங்க விடமாட்டேன்னு சொல்றாங்கள்லா, அதான்.”
“அடி சிரிக்கிகளா, எம்புள்ளைய இப்படி கெடுத்து வச்சிருக்கீங்கலேட்டி! ஏல ஐயா, நிறுத்துய்யா உங்கதைய, வா நாம தூங்கப் போலாம்” என்றாள் சங்கரின் அம்மா கணபதி.
“நா வரல, நா இங்கயே சரசக்கா கூடத் தூங்கிக்கிறேன். நீங்க போங்க.”
“ஒத வாங்கப் போற. ஒழுங்கா அம்மாகூட வந்துரு. காலைல பள்ளிக்கூடம் போனும்லா.”
“நா வரல.”
“சரிக்கா இங்கயே படுத்துக்கட்டும் காலைல நா வந்து விட்டுறேன்”, என்றாள் சரசு.
சரி, அப்படி என்னடி சொக்குப் பொடி போட்ட? எப்ப பாத்தாலும் சரசக்கா சரசக்கானே சொல்லிட்டு இருக்கான்?”
“அட போங்கக்கா நீங்க வேற” என்றாள் சரசு.
சற்று நேரத்தில் பாயை விரித்துத் தானும் படுத்துக் கொண்டு அருகில் சங்கரையும் படுக்க வைத்தாள் சரசு. 38வது முறையாக கூலிக்காரன் கதை தொடங்கியது.
ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடைசியாக இருக்கும் மூன்று வீடுகள். நடுவே சங்கரின் வீடு, இடதுபுறம் சரசக்காவின் வீடும், வலது புறம் சித்தி இராசம்மாவின் வீடும். ஊரிலுள்ள அழகான ஒரு சில பெண்களில் சரஸ்வதி என்ற சரசுக்கு முதல் இடம். பார்ப்பதற்கு சினிமா நடிகை ராதாவைப் போலவே இருப்பாள். ஒரு சிலர் அவளைக் குட்டி ராதா என்றே கூப்பிடுவார்கள்.
சங்கருக்குத் தன் சொந்த அக்கா மகேஸ்வரியை விட சரசக்காவைத்தான் மிகவும் பிடிக்கும். முறைக்கு அத்தையானாலும் சிறு வயதிலிருந்தே சரசக்கா சரசக்கா என்று கூப்பிட்டதால் சரசு அத்தை சரசக்கா ஆனாள். சங்கர் தன் வீட்டில் இருப்பதைவிட சரசக்கா வீட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். ஒரு சில நேரங்களில் சரசக்கா மடியிலேயே தூங்கிய இரவுகளும் உண்டு.
சரசக்காவுக்கும் அதே போலத்தான். தனக்கு ஒரு தம்பி இல்லையென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. சங்கரைத் தன் உடன் பிறந்தத் தம்பியாகவே நினைத்தாள். அவனுக்கு சோறூட்டுவதும், குளிக்க வைப்பதும், தூங்க வைப்பதும் எல்லாமே அவள்தான்.
சங்கர் அந்த ஊரிலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். சரசக்கா தையல் பயிற்சிப் பள்ளியில் தையல் டீச்சர். தினமும் வேலைக்குப் போய்விட்டு வரும்பொழுது சங்கருக்கு 2 தேன் மிட்டாய் வாங்கி வருவாள்.
“ஏல ச்சங்கரு, இன்னைக்கு ஒனக்கு லீவுதான? அக்காகூடத் தையல் கிளாஸ் வாரியா?” என்றாள் சரசக்கா.
“ஓ வாரேனே” என்று குஷியாகக் கிளம்பினான் சங்கர்.
சரசக்கா தையல் கற்றுக் கொடுத்துவிட்டு வரும்வரை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
தையல் கிளாஸ் முடித்துவிட்டு வரும் வழியில், “ஏல ச்சங்கரு பேசாம குனிஞ்சிட்டே வால” என்றாள் சரசக்கா.
“ஏங்கா?”
“அங்க நிக்கிறானுவ பாரு, அவனுவ ரௌடிப் பயலுவ. அக்காவ கிண்டல் பண்ணுவானுவ.”
“அப்படியாக்கா?”
“ஆமால, பேசாம வா.”
“நா வேணா போய் கூலிக்காரன கூட்டீட்டு வரவாக்கா?”
சிரித்துக் கொண்டே, “பேசாம வா எங்கூட”, என்றாள் சரசக்கா.
“சொல்லுக்கா.”
“பேசாம வாய மூடிட்டு வால.”
மறுநாள், கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சரசக்கா துணைக்கு சங்கரையும் அழைத்தாள். சரசக்கா கூப்பிட்டு வராமல் இருப்பானா? அவள் கைபிடித்து நடக்கத் தொடங்கினான்.
“ஏல ச்சங்கரு இப்படி அக்கா காலயே சுத்திட்டு வாரயே, அக்காக்கு கல்யாணம் முடிஞ்சி வேற ஊருக்குப் போயிட்டேம்னா என்னல பண்ணுவ?” என்று கேட்டாள் சரசு.
“நானும் ஒங்கூட வருவேன்.”
“ஏல அதுக்கு எம்புருசன் சம்மதிக்கனும்லால?”
“சம்மதிக்கலேன்னா நா கூலிக்காரன கூட்டிட்டு வந்துருவேன்.”
“இதுக்கும் கூலிக்காரந்தானா?” சங்கரை அணைத்து, முத்தமிட்டு, இடுப்பில் தூக்கி வைத்து நடையைத் தொடர்ந்தாள்.
இப்படியே சரசக்காவுடன் சந்தோசமாக காலம் கழிந்து கொண்டிருந்தபோது ஒரு நாள், “ச்சங்கரு நம்ம ஆச்சிக்கு ஒடம்புக்கு முடியலையாம், நாம போய் பாத்துட்டு வரலாம் வா” என்று சங்கரை அழைத்தாள் அவன் அம்மா.
“இல்லம்மா நா வரல, நா சரசக்கா கூடவே இருக்குறேன்.நீங்க போய் பாத்துட்டு வாங்கம்மா.”
“நாலு நாள்ல வந்துரலாம்டா வா. ஆச்சி ஒன்னியப் பாக்கணுமாம்.”
“எம்மா நா வரலம்மா,” என்று அழுதான் சங்கர்.
“அதெல்லாம் முடியாது. ஒழுங்கா வந்துரு,| என்று அழுகின்ற பிள்ளையைத் தரதரவென்று இழுத்துச் சென்றாள் அம்மா. சங்கரோ, “சரசக்கா சரசக்கா” என்று அழுதவாறே சென்றான்.
மறுநாள், “ஏ ச்சங்கரு ஆச்சி ஒன்ன கூப்டுறா பாரு, இங்க வாயேன்” என்று சங்கரைக் கூப்பிட்டாள் அம்மா.
பதில் ஏதும் இல்லை.
“காதுல விழுதா இல்லையா? இங்க வந்துட்டுப் போயேன்” என்று மீண்டும் அழைத்தாள்.
விருப்பமில்லாமல் சென்று ஆச்சியைப் பார்த்துவிட்டு வந்து, மீண்டும் அதே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
சங்கர் சோகமாக இருப்பதைப் பார்த்த அவன் அத்தை செல்வி, “ஏல ஒங்க ஆச்சி ஒன்னும் பொட்டுன்னு போயிற மாட்டா, அவா யமனையே வந்து பாருன்னுலா சொல்லுவா. நீ கவலபடாத தங்கம்” என்றாள்.
சரசக்காவைப் பிரிந்து நரகத்தில் இருப்பதுபோல் உணர்ந்தான் சங்கர். எப்படா மீண்டும் ஊருக்குச் செல்வோம், சரசக்காவைப் பார்ப்போம் என்று ஏங்கிக்கொண்டிருந்தான் அவன். எப்போதும் துறுதுறுவென்று இருப்பவன் இப்போது அமைதியாக திண்ணையில் அமர்ந்து சரசக்காவையே நினைத்துக் கொண்டிருந்தான். திண்ணையில் அமர்ந்தவாரே ஒரு வாரம் கழிந்தது.
சிவந்திபுரம் வந்து பஸ் நின்றதுதான் தாமதம், இறங்கி ஓடத் தொடங்கினான்.
“ஏல வந்ததும் வராததுமா எங்கல ஓடுற?” என்றாள் அம்மா.
“சரசக்கா வீட்டுக்கு” என்று பதில் வந்தது.
சரசக்கா வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். எல்லோரையும் விலக்கிக் கொண்டு புகுந்து ஓடினான். மலரக்கா வந்து சங்கரைத் தடுத்து நிறுத்தி, தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.
“சரசக்கா எங்கக்கா?” என்று கேட்டான்.
“அவளுக்கு ஒடம்பு சரி இல்லப்பா. அப்பறம் பாக்கலாம்” என்றாள் மலரக்கா.
“இல்ல முடியாது, எனக்கு இப்பவே பாக்கணும்.”
“அது முடியாதுப்பா. சொன்னா கேளு.”
“இல்ல எனக்கு இப்பவே பாக்கணும்” என்று அழத் தொடங்கினான்.
சற்று நேரத்தில் சங்கரின் அம்மா அங்கு வர, வெளியே நின்று கொண்டிருந்த சுந்தரியிடம் என்னவென்று கேட்டாள்.
“அந்தக் கொடுமைய ஏங் கேக்குறீங்க மைனி, போன செவ்வாய் கெழம மத்தியானம் உச்சி வெயில்ல ஆத்துக்குப் போயிருக்கா சரசு. அப்போ ஆத்துக்குப் பக்கத்துல இருக்கானே சாணக்கட வடிவேலு, அவன் பொண்டாட்டி கருப்பாயி, போன மாசங்கூடத் தூக்கு போட்டு செத்துப் போனாளே, அவ வந்து நம்ம சரசு மேல அப்பிக்கிட்டா. பாவம் புள்ள அதுல இருந்து இப்படிதான் கெடக்கு. இன்னைக்குத்தான் கேரளால இருந்து ஏதோ ஒரு சாமியாரு வந்துருக்காரு ஓட்றதுக்கு. அன்னில இருந்து இன்னைக்கு வரைக்கும் யாரும் கிட்டப் போகல. போறதுக்கே பயமா இருக்கு” என்றாள்.
சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனை யாரும் வீட்டினுள் விடவுமில்லை. வெளியே அழுது கொண்டிருந்த சங்கருக்கு, உள்ளிருந்து சரசக்காவின் அழுகுரல் மட்டும்தான் கேட்டது. அவ்வப்போது சரசக்காவை யாரோ அடிப்பது போலவும், இழுப்பது போலவும், அதற்கு அவள் “என்ன விட்டுருங்க என்ன விட்டுருங்க” என்று கத்துவதும்தான் கேட்டது.
சற்று நேரத்தில் சரசக்காவின் அழுகுரல் ஓய்ந்தது. விழுந்த அடியும்தான். வெளியில் வந்த சாமியார், “இன்னைக்கு ஒத்து வரல வர்ற வெள்ளிக்கிழம வாரேன் அது வரைக்கும் இந்த மூதிய கட்டியே போட்டுருங்க” என்று சொல்லிச் சென்றார்.
எல்லோரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்ற சங்கர், தன் வீட்டு பின்புறத்திலுள்ள தண்ணீர்த் தொட்டி மீது ஏறி, அங்கிருந்து சரசக்கா வீட்டை எட்டிப் பார்த்தான்.
சரசக்கா. குட்டி ராதா என்று அழைக்கப்பட்ட அதே சரசக்கா இப்போது தலைவிரி கோலமாய், ரத்தக் காயங்களுடன், கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டு அழுது கொண்டிருந்தாள். அருகில் ஒரு தட்டில் வைத்த சாப்பாடு அப்படியே இருந்தது.
“சரசக்கா, சரசக்கா…” என்றான் சங்கர்.
மெதுவாகத் தலையை நிமிர்ந்து பார்த்த சரசக்கா, “ச்சங்கரு, என் தங்கம், எங்கடா போன இவ்ளோ நாளா? அக்காவ விட்டுட்டுப் போய்ட்டேல்ல, இப்போ அக்காவப் பாரு, அக்கா நெலமையப் பாரு, நீ அக்காவ விட்டுட்டுப் போனதுனாலதான் இப்படி. நீ மட்டும் இங்க இருந்துருந்தேன்னா அக்காக்கு இப்படி ஆயிருக்குமா?” என்று அழுதாள்.
“அக்காக்கு ஒன்னும் இல்லடா. சொன்னா யாரும் கேக்க மாட்டேங்குராங்கடா. இங்க பாரு கால்ல சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்க பாரு, யாரும் கிட்டயே வர மாட்டேங்குராங்க. இந்த ரூம்ல போட்டு அடச்சி வச்சிட்டாங்கடா. அக்காக்கு ஒன்னுமில்லடா, நீயாது நம்புடா, என்ன விட்டுறச் சொல்லுடா கெஞ்சிக் கேக்குறேன்டா. அக்காவ விட்றச் சொல்லுடா” என்று சொல்லி மேலும் அழுதாள்.
இத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சங்கர், “இருக்கா நா போய் கூலிக்காரன கூட்டிட்டு வாரேன்” என்று ஓடினான். “ஏல ச்சங்கரு ச்சங்கரு” என்று கத்திய சரசக்காவின் குரலைக் கேட்காமல், கூலிக்காரனைக் கூப்பிட ஓடினான்.
இரவு 8 மணி வரை சங்கரை யாரும் தேடவில்லை. இரவு சாப்பாட்டைத் தயார் செய்து விட்டு கொஞ்சம் ஓய்ந்து உட்கார்ந்தாள் சங்கரின் அம்மா. அப்போதுதான் அவளுக்கு சங்கரின் ஞாபகமே வந்தது.
“ஆமா இந்த ச்சங்கருப் பயல எங்க?” என்றாள்.
வீட்டிலிருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு விழித்துக் கொண்டிருந்தனர். பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குச் சென்று சங்கரைத் தேடத் தொடங்கினர். சிலர் வீட்டில் தேட, சிலர் கடைத் தெருவில் தேட, சிலர் வயக்காட்டில் தேட, சிலர் காட்டுக்குள் தேட, எங்கு தேடியும் இரவு 10 மணி ஆனபின்பும் கிடைக்கவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. யானை மிதித்திருக்குமோ, நரி கடித்திருக்குமோ, பாம்பு கொத்தியிருக்குமோ என்று.
திடீரென்று ஒரு சத்தம்.
“ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர்.
ஓடிவந்தவளிடம், “எக்கா இங்க பாருங்களேன்” என்றாள் மலர். இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.
சரசக்காவின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா, அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.
௦௦௦
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா
Filed under: எழுத்து, சிறுகதை, மு வெங்கடேஷ்
