Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

பிரமலிபி –ப. மதியழகன் கவிதை

$
0
0

ப. மதியழகன்

1

கடவுள் இந்த உலகத்திற்கு இனி இறங்கிவரப் போவதில்லை
கைவிடப்பட்ட கூட்டத்தின் செயல்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றன
இந்த உலக விளையாட்டில் ஒவ்வொரு மனிதனும் பந்தயக் குதிரைதான்
என்னைப் போன்ற முடமான குதிரை மீது யார்தான் பணம் கட்டுவார்கள்
இந்த நாடகத்தில் பாத்திரத்தோடு நான் ஒன்றிப் போய்விட்டேன்
விதியின் கைகள் என் தலையில் என்ன எழுதி வைத்துள்ளதோ
தாகம் கொண்ட மீனுக்குத் தெரியாது தான் தண்ணீரில் இருக்கிறோமென்று
வாழ்வுநெறிகளைப் போதிக்கும் மறைகளெல்லாம்
கடவுளால் அருளப்பட்டவைதானா என்று சந்தேகம் எழுகிறது
எத்தனை இரவுகள் காத்திருப்பது
இன்றாவது எனது வாழ்வில் வசந்தம் வீசாதா என்று
ஆலயங்களில்கூட தெய்வீகத்தன்மை வெளிப்படுவதில்லை
இந்தப் பாவிகளின் கூடாரத்தை நிர்வகிப்பது யார், கடவுளா? சாத்தானா?
ஆயுள் முழுவதும் உலக அரங்கில் பார்வையாளனாகவே இருக்க வேண்டியதுதானா?
கடவுளே இந்த உலகத்தினரை நியாயந் தீர்க்கும் அதிகாரத்தை
யாருக்கு வழங்கி இருக்கிறாய்
ஆத்மா சோதனைக்குள்ளாகும் போது என் மனவானம் உனது அருள்மழைக்காக ஏங்கி நிற்கிறது
கெளபீன சந்நியாசியிடம் லெளகீக பிச்சையைத்தானே நாம்
இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
மரணம் வரட்டும் என்று கல்லறையில் காத்துக் கொண்டிருக்க முடியாது
பசி வயிற்றைக் கிள்ளும்போது கடவுள் இருக்கும் திசைகூட மறந்துவிடும்
எண்ண அலைகளின் தோற்றுவாயை தேடிக் கொண்டிருக்கிறேன்
மனம் சலனமற்று இருக்கும் போதுதான் அதில் கடவுளின் முகம்
பிரதிபலிக்க முடியும்
தொலைத்த பின்புதான் தெரிந்தது வாழ்க்கை பொக்கிஷமென்று.

2

காகிதத்தில் உணவு என்று எழுதினால் வயிறு நிறைந்துவிடுமா
இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே
வாழ்க்கையின் வேர்களாக இருக்கிறார்கள்
நினைத்ததை அடைந்தவுடன் வேறு ஒன்றை நோக்கி
மனம் தாவிவிடுகிறது அல்லவா
ஏதோ ஒன்றை நோக்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றோமே ஏன்
பூத்துக் குலுங்கும் மரங்களில் தானே பறவைகள் கூடு கட்டுகின்றன
ரசிப்பதற்கு யாருமற்ற வனாந்திரத்திலும் பூக்கள் பூக்கத்தானே செய்கின்றன
உன்னிடம் சன்மானம் எதிர்பார்த்தா குயில் கூவுகிறது
இரவுப்பொழுதில் யாரோ உன்னை பின்தொடர்வதுபோல்
இருப்பதை அவதானித்து இருக்கின்றாயா
புனிதத்தின் காலடியைத் தேடித்தானே கடவுள் அலைந்து கொண்டு இருக்கின்றான்
மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத சுவர்கள் பூமியைச் சுற்றி இருக்கத்தானே செய்கின்றன
எல்லைகளை வகுத்துவிட்டு கடவுள் எங்கே சென்றுவிட்டான்
விதிவலை இழுக்கப்படும்போது அகப்பட்டுக்கொண்டவர்கள்
துடிக்காமல் என்ன செய்வார்கள்
சித்தர்களே புனிதத்தின் மீது காறி உமிழ்ந்தவர்கள்தானே
இன்னும் எவ்வளவு காலம் இந்த உடலைச் சுமந்தலைவது
அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றி கூறவா கோயிலுக்குச் செல்கிறோம்
பிச்சைக்காரன் உன்னிடம் எதர்பார்ப்பது சில்லரைகளை மட்டும்தானா
மகத்தானவர்கள் கருணையினால்தானே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டார்கள்
மன்னிப்பது கடவுளின் குணமல்லவா
சக்கரவர்த்தியானாலும் மரணத்திற்கு முன்பு மண்டியிட்டுத்தானே ஆகவேண்டும்
நாளையைப் பற்றிய எதிர்பார்ப்பில் தானே
வாழ்க்கையின் உதாசீனங்களைப் பொறுத்துக் கொள்கிறோம்
கடவுளே வந்து சென்ற மெசியாவுக்கு நான் சாட்சியாக இருப்பது
உனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறதா
கடவுளே உனக்கு கருணை கிடையாது என்னைக் காயப்படுத்திப்
பார்த்துக்கொள் குருதி வழிகிறதா என்று
ஆடம்பரமான மாளிகையில் எவ்வளவு சுகபோகத்தில் வாழ்ந்தாலும்
கடைசியில் மனிதனை மண்தானே தின்கிறது.

3

தூக்கத்திற்கு தூண்டில் போடுகின்றன விழிகள்
மனம் இந்த இரவை மட்டும் கடந்துவிட்டால் போதும் என்கிறது
வழக்கத்திற்கு மாறுதலாய் நிசப்தமாய் இருக்கிறது வானம்
இந்த உலகத்தின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை
மெய்யியலைத் தேடுபவர்கள் உங்களுக்கு பைத்தியமாகத்தான் தெரிவார்கள்
இந்தப் பூமிக்கு யாரும் முக்கியஸ்தர்கள் இல்லை
மரணஅலைகள் ஒவ்வொரு நாளும் கொண்டுபோய்க் கொண்டிருக்கிறது உயிர்களை
இந்த உலகத்தின் வேர்களை அறிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல
பிறப்பு, இறப்பு இரண்டிலொன்றை தேர்வு செய்யவேண்டிய
இக்கட்டான நிலை எனக்கு
இந்த உலகம் இரவுப்பொழுதை சாத்தானுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டது
மரணப்பறவை எனக்கான செய்தியை எப்போது கொண்டுவரும்
வாழ்க்கை என்னவென்று புரியாமலேயே இவ்வளவு
காலங்கள் ஓடிவிட்டன
எனது மரணத் தாகத்தைத் தணிக்க பெருங்கடல் போதாது
பால் வேற்றுமையிலிருந்தும், தோல் விவகாரத்திலிருந்தும்
இந்தப் பிறவிலாவது விடுபட்டுவிட முடியுமா
இந்தப் பாவிக்கு பின்னாலிருப்பது மரணத்த்தின் காலடிகள்தானே
மரணதேவதை என்னுடன் விளையாடுகிறது
கடவுளை அடைவதற்கு உன்னதமான வழி
தற்கொலைதான் என்று சொல்லிச் சிரிக்கிறது
இந்த இரவுப்பொழுது நான் சபிக்கப்பட்டவன் என்பதை உறுதிப்படுத்துகிறது
பாவத்தின் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்
துயரப் படுக்கையில் எவ்வளவு நாள் காலங் கழிப்பது
கடவுள் செய்யும் சித்ரவதைகளுக்கு
மரணம் முடிவு கட்டிவிடும் அல்லவா?

4

இந்த உலகைப் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன
மனிதனின் வேர்கள் பலமிழந்துவிட்டன
சாதாரண தரைக்காற்றுக்குக்கூட தாங்காது அவைகள்
தான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடம்
மயானத்தின் மீது எழுப்பப்பட்டது என அவனுக்குத் தெரியாது
இந்த உலகில் செயல்படும் விதிகள் என்னைக் குழப்பமுறச் செய்கின்றன
அல்லல்படுவோரின் கூப்பாடுகளெல்லாம்
வெற்றுக் கூச்சல் என புறந்தள்ளப்படுகின்றன
இரவுக் கடவுள் தரும் உறக்கம்
மனிதர்களை நரக இருளிலிருந்து விடுவிக்கிறது
கடவுளின் ஆளுகைக்குள் இந்தப்பூமி மட்டும் உட்படாததன் ரகசியம் என்ன
ஆதாமின் சந்ததிகள் கடவுளின் சாம்ராஜ்யத்தில் ஒருநாளும் நுழையமுடியாதா
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தொடங்கும்போது
தெய்விக ஒளி புலப்பட ஆரம்பிக்கிறது
இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒருவிலை இருக்கின்றது
மெய்யான வாழ்வுக்கு பரிசுத்தம் தேவையாய் இருக்கிறது
ஆற்றைக் கடக்க உதவியதற்காக தோணியை தோளில் சுமந்தலைய முடியுமா
இந்த உலகம் கனவு என்று தெரிய வரும் நாளைத்தான்
நாம் மரணம் என்கிறோம்
நிர்பந்தித்து செய்ய வைக்கும் எதுவும்
தனது புனிதத்தன்மையை இழந்துவிடுகிறது
பூமியின் விடுதலை ஏக்கத்தைத்தான் மனிதன் பிரதிபலிக்கிறான்
உடலை எது செலுத்துகிறது என்று நாம் எண்ணிப் பார்த்தோமா
திகட்ட திகட்ட சுகத்தை அனுபவிப்பவர்கள்
தாம் யாருக்கு கருவியாய் இருக்கிறோம் என்பதை உணர மாட்டார்கள்
நூல்கொண்டு ஆடும் பொம்மைகளுக்கு
சுதந்திரக் கனவென்பது விடியாத இரவாகத்தான் இருக்கப் போகின்றது
வாழ்க்கைப் புத்தகத்தில் என் பக்கங்களை வெற்றிடமாக விட்டுவிடுங்கள்
நான் அர்த்தப்படுத்திக் கொண்ட உலகை சிருஷ்டிக்க நான் கடவுளல்ல.


Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!