Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

இடைவெளிகளின் வெளிச்சம் –பீட்டர் பொங்கல் குறிப்பு

$
0
0

பீட்டர் பொங்கல்

‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்ற இத்தாலிய பொதுவழக்கை மறுத்து, மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை, என்று பொருள்பட போர்ஹெஸ் கூறியது பிரசித்தம். இரண்டில் எது மேன்மையானது, எது துல்லியமானது, எது சரியானது என்ற கேள்விகள் பலவற்றை புறக்கணித்து, வாசிப்பின் பொருள் கூடுவது குறித்த வியப்புணர்வில் வந்து நிற்கிறார் போர்ஹெஸ். இந்த வியப்புணர்வு இல்லையென்றால் மொழிபெயர்ப்பதற்கான உந்துவிசை கணிசமாய் குறைந்து விடும். முதற்படைப்பு செய்வதைவிட மொழியாக்கம் அதிக காலம் எடுத்துக் கொள்கிறது, அதிக பிழைபட்டு பெரும்பாலும் அதிருப்தியில் முடிகிறது. மொழியாக்கத்தைத் தொடரும்போது, ஒவ்வொரு திருத்தத்துடனும் முதற்படைப்பு குறித்த  புரிதல் விரிவடைவதும் அதன் மாண்பு கூடுவதும் மொழிபெயர்ப்பாளனின் தனியனுபவங்கள், இன்னுமொன்றைப் பின்னொரு நாள் முயற்சிப்பதற்கான அந்தரங்க வசீகரங்கள். முதற்படைப்பில் வந்து விழும் சொற்கள் மொழியாக்கத்தில் பொருள் பொதிந்தவையாக, தவிர்க்க இயலாத முக்கியத்துவம் கொண்டவையாக மாறுவது அந்த ரசவாதத்தின் ஆதி மயக்கம்.

இவ்வாரம் நம்பி கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்துள்ள கவிதைகளையும்கூட இங்கு எடுத்துக் கொள்ளலாம் https://padhaakai.com/2018/02/10/3-translations/.  மூன்றும் இந்திய- ஆங்கில கவிதைகள், எழுதியவர்கள் சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா,  மற்றும் தீபங்கர் கிவானி.

இதில் சி. பி. சுரேந்திரன் கவிதை ஒப்பீட்டளவில் எளியது, ஆனால் அதன் மொழியாக்கத் தேர்வுகள் சுவாரசியமானவை. கவிதையின் தலைப்பு, “A Friend in Need”. நேரடி மொழியாக்கம் எதையும்விட  அதன் இடியமட்டிக் தன்மை கருத்தில் கொள்ளப்பட்டு, “இடுக்கண் களைவதாம் நட்பு” என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

‘He sits in a chair/ Whose fourth leg/ Is his,’ என்பது ‘நாற்காலியில் அமர்கிறான்/ அதன் நான்காம் கால்/ அவனுக்குரியது,’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஒரு தேர்வு இருக்கிறது. He sits in a chair, என்பது ‘அவன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்’ என்றும் தமிழாக்கப்படலாம். இந்த முதல் வரி புதிரானதுதான் என்றாலும், ‘நாற்காலியில் அமர்ந்திருக்கிறான், அதன் நான்காம் கால் அவனுக்குரியது’ என்பதில் ஒரு செயல் நிறைவு பெற்று விடுகிறது. ஆனால், ‘நாற்காலியில் அமர்கிறான், அதன் நான்காம் கால் அவனுக்குரியது’ என்பதில் ஒரு இடைவெளி இருக்கிறது- நான்காம் கால் யாருடையது? இதையே இந்தக் கவிதையும் பேசுகிறது.

அடுத்து, ‘… He loves/ This chair,’ என்பது, ‘… இந்த நாற்காலி/ அவனுக்கு பிரியமானது,’ என்ற மொழியாக்கத்தில் பெரிய தேர்வுகள் இல்லை. அவன் இந்த நாற்காலியை நேசிக்கிறான், காதலிக்கிறான், விரும்புகிறான் என்றெல்லாம் சொல்லலாம் என்றாலும் பிரியமானது என்பதில் உள்ள உள்ள முத்திரைத்தன்மை மற்றவற்றில் இல்லை.

‘They used/ To make love in it,’ என்பது ‘அதில்/ அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள்,’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அளவு பேச்சு வழக்கு தமிழில் இல்லை, ஒரு குறையே. ஆனால் make love என்பதைவிட புணர்தல் இந்தக் கவிதையின் பொருள் சூழமைவில்கூட மேலும் அர்த்தமுள்ளது- நாற்காலியின் நான்காம் கால் அவனுக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளதை இங்கு கவனிக்கலாம். அவன் நாற்காலியில் புணர்கிறான் என்பது மட்டுமல்ல, நாற்காலியும் ஆகிறான். இந்தப் பொருள் ஆங்கிலத்தில் வருவதற்கு முன்பே தமிழாக்கத்தில் வந்து விடுகிறது.

அடுத்து, ‘That was when the chair/ Had four plus two plus two,/ Eight legs,’ என்பது ‘அப்போது நாற்காலிக்கு/ நான்குக்கு மேல் இரண்டு இன்னம் இரண்டு,/ எட்டு கால்கள்,’ என்று தமிழாகிறது. ‘That was when’ என்பது ‘இன்னது நடந்த காலம்’ என்பதைச் சொல்லத் துவங்குகிறது, ஆனால் தமிழில், ‘அப்போது,’ என்று துவக்கத்திலேயே முடிந்து விடுகிறது- அப்போது நாற்காலிக்கு நான்கு கால்கள் இருந்தன, அந்த நான்கு கால்களின் மீது இரண்டு கால்கள் இருந்தன, அந்த இரண்டு கால்களின் மீது இன்னும் இரண்டு கால்கள்- ஆக மொத்தம் அந்த நாற்காலியில் எட்டு கால்கள், அவ்வளவுதான். அந்த எட்டு கால்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்ற எண்ணத்தை ஆங்கிலத்தில் ‘that was when’ என்பது ஒரு நிகழ்வாய் உணர்த்துகிறது, தமிழில் அப்படியெல்லாம் இல்லை. அதனால்தான் அடுத்து ‘Days with legs,’ என்று தொடரும்போது நம்மால் பிணைந்த கால்களுக்கு அப்பால் வேறொன்றையும் கற்பனை செய்ய முடிகிறது- தமிழில் ‘காலுள்ள நாட்கள்’, நாட்களுக்கு கால்கள் முளைத்தது போன்ற கற்பனைக்குக்கூட காரணமாகிறது. தவறில்லை, காலம் வேகமாய்ப் போனது என்று வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்திலோ, ‘Days with legs’ என்பது மூன்று வகைகளில் பொருட்படுகிறது: முன் சொன்ன வரிகளைப் பார்க்கும்போது, நாட்கள் கூடலில் பிணைந்திருக்கின்றன; கூடலில் இருந்த காரணத்தால் நாட்கள் வேகமாய்ச் சென்றன; நீண்ட நாட்கள் தொடர்ந்திருக்க வேண்டிய இந்தக் கதையில் அடுத்து கால்கள் வெளியேறுகின்றன, கால்களை இழந்த நாற்காலி முடமாகிறது- திரும்பிப் பார்க்கும்போது, காலுள்ள நாட்களில் இப்போது நகைமுரண் தொனிக்கிறது.

இதோ ஒரு சிறுகதை போல் கவிதை முடிவுக்கு வருகிறது – ‘There has been a lot of walking out/ Since then.’ அதற்கப்புறம் நிறைய வெளியேற்றங்கள். walk out என்பதற்கும் walk out on என்பதற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் இருக்கின்றன. walk out with என்றால் உடன் நடப்பதாக பொருள் வரும், ஆனால், walk out on with என்று சொல்ல முடியாது – walk out on என்றால் ஒருவருக்கு எதிராக, அல்லது ஒருவரை நிராகரித்து, வெளியேறுவதும் பிரிவதும் மட்டுமே. இந்தக் கவிதையில் ‘days with legs,’ என்பதைத் தொடர்ந்து, ‘There has been a lot of walking out/ Since then,’ என்று வரும்போது, நிறைய நடந்தார்கள், வீட்டில் மட்டுமல்ல, வெளியேயும் சுற்றி வந்தார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நமக்கு walk out என்றால் வெளிநடப்புதான், இல்லையா? பிரிவின் சாயல் தொனிக்கிறது, எனவே, ‘நிறையவே நடந்து முடிந்திருக்கின்றன,/ அந்த நாட்களுக்குப் பின்,’ என்ற தேர்வு மேற்கொள்ளப்படுகிறது. இங்கும் கவிதையின் மையம் ஆங்கிலத்தை விட தமிழில் சீக்கிரமே வந்து விடுகிறது.

ஆம், ‘இப்போது நாற்காலிக்கு ஒரு கால் குறைவு,’- /Now the chair’s/ Short of a leg,’ எனவே அவன் தன் காலை அதற்கு இரவல் அளிக்கிறான்- ‘And he’s lending his’- எட்டு கால்கள் இருந்த இடத்தில் இப்போது மூன்றுதான் இருக்கின்றன என்ற குறையைப் போக்க தன் கால்களில் ஒன்றை பரிதாபகரமாக ‘இரவல்’ தருகிறான், இல்லை, முட்டுக் கொடுக்கிறான்.

‘மொழிபெயர்ப்பாளன், துரோகி’ என்பது சரியா, ‘மொழியாக்கத்துக்கு விசுவாசமாய் முதல்நூல் இல்லை,’ என்பது சரியா? மொழியாக்கத்தின் விளைவுகள் விசுவாசம், துரோகம் என்று சொல்லக்கூடிய சார்பு நிலையில் ஒப்பிட்டுக் கணக்கு பார்க்கக்கூடியவை அல்ல என்று நினைக்கிறேன். எழுதி முடிக்கப்பட்ட படைப்பை யாரும் திருத்தி வாசிப்பதில்லை, அப்படியொரு முயற்சி அபத்தமான ஒன்றாய் இருக்கும்- ஆனால், மொழிபெயர்ப்பு அதற்கொரு வாய்ப்பு அளிக்கிறது. மொழியாக்கத்தின் பயன் முதல்நூல், மொழியாக்கம் என்ற இரண்டின் இடைவெளியில் உருவாகக்கூடிய பொருட்படுதல்களால்- அவை பொருத்தம் கருதி ஏற்கப்படுகின்றனவோ இல்லையோ அல்லது கடத்தப்பட்ட பொருள் போல் சொற்களின் மறைவில் ரகசியமாய் உட்போதிந்திருக்கிறதோ, எப்படியானாலும்-  நாம், மொழிபெயர்ப்பாளனும் வாசகனும், அந்த அனுபவத்தில் அடையக்கூடிய செறிவுதான். இது உரைநடையிலும் உண்டு என்றாலும் கவிதைக்கு கூடுதலாய்ப் பொருந்துகிறது, பிரிந்து ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒன்றுகூடி ஒருபொருட்படுவதால்.


Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!