இரவுகள் தூங்கிக் கொண்டிருந்தன
நினைவுகள் பிளந்து கொண்டு
தன்போக்கில் அலைந்தன
தூங்கும் இரவுகளிடம்
முறையிடல்களை முன்வைத்த
மனிதர்களை நான் கண்டேன்
பாஷைகளற்ற மௌனம்
சூழ்வதையும் பின் கலைவதையும்
ஒவ்வொரு முறையிடலுக்குப் பின்னும்
கேட்கிறேன்
ஓய்விலிருக்கும் ஒவ்வொன்றும்
தனக்கென்றொரு தவத்தை
தனக்கென்றொரு வரத்தை
தானே கண்டடைகின்றன
கையளிக்க எதுவுமற்ற
வரண்ட இரவுகள் இவை
அதனிடம் எதையும் எதிர்பார்த்திருப்பதன்
அர்த்தமின்மையை உணரும் தருணம்
ஒரு பேருறக்கத்தினுள்
நான் என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
பாஷைகளற்ற மௌனம்
என்னை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது
ஒரு குருட்டு நட்சத்திரத்தை தானும்
விட்டு வைக்காத வரண்ட இரவுகள்
மௌனமாய் உறைந்திருந்தன
எனது ஆன்மாவின் அங்கலாய்ப்பை
எனது தனிமைத் தவத்தை
பேயுரு கொண்டு கலைக்கிறேன்
இரவுகள் துயில் கலைந்து
வனத்தின் ஆழத்துள் சென்று மறைகின்றன
இந்த நூற்றாண்டின் இரவுகள் இயங்குவதற்காகவும்
பகல்கள் உறங்குவதற்காகவும் என காலத்தை
மாற்றியமைக்கும் வெறியுடன்
தூங்கும் இரவுகளை பேயுரு கொண்டு
கலைக்கிறேன்
Filed under: எழுத்து, கவிதை, ஜிஃப்ரி ஹாசன்
