மலையத்தனை நீர்த்தாரையை
அருகணைந்து தரிசிக்க
பெரும்படகில் குழுச் சவாரி.
நனையாத நெகிழி ஆடையும்,
தருணங்களைத் தவறவிடாமலிருக்க
பதிவுக்கருவிகளுமாக,
மனிதக்கொத்துகள்.
மலையருவி புரண்டுவிழ
புகைமூட்டமென மேலெழுகிறது
சாரல் நீர்த்திரை.
ஆற்று நீர்ப்பரப்பில்
துடுப்பு நடைபோட்டபடி
கடந்து செல்கின்ற,
இறக்கையில் இருகோடுகள் கொண்ட
வளைய மூக்கு கடற்பறவை ஒன்று,
புகைத்திரையினூடே
மலைமுடியைத் தொட்டு மீள
எழும்பிப் பறக்கின்றது.
*ring billed gull – வளைய மூக்கு கடற்பறவை
Filed under: எழுத்து, கவிதை, ஸ்ரீதர் நாராயணன் Tagged: கவிதை, நயாகரா, ஸ்ரீதர் நாராயணன்
