Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

யாகச் சொல் சொல் யாகம்

$
0
0

பானுமதி. ந

லாஸ்யம் சத்யம் ராகவம் – 1   

யாகச் சொல் சொல் யாகம்

 

சொல் என்பது என்ன?

சொல்வதா? சொல்லப்படுவதா? சுட்டும் பொருளா? பொருளான சொல்லா? “த்வனி”யான சொல் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ளுமா? சொல்லிற்கும் அதன் பொருளிற்கும் இடைவெளி இருக்கிறதா? இருந்தால், அது அவரவர்க்கு மாறுபடுமா?

சொல்லை எப்படி ஒரு மந்திர விசையாக்குவது என்று அவர் தன் வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அதன் அர்த்தத்தை, தொனியை அவர் தொடர்ந்து உயிர்த்தெழச் செய்தார். நகல் எடுக்க முடியாத, ஒரு போதும் காலத்தால் பின்தங்காத, எதன் முன்னும் சாரமிழக்காத…” திரு லா.ச.ராவின் எழுத்துக்களைப் பற்றி திரு. மனுஷ்ய புத்திரன் ஒரு முகவுரையில் இப்படிச் சொல்கிறார்.

லாசராவின் யாகச் சொல் என எனக்குப் படுவது “தருணம்”.

“வேளை” காலத்தைவிடச் சிறப்பு வாய்ந்தது. ‘ஏகா‘வின் நாயகியின் ஒரு உரையாடல் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ” வேளைக்கும் காலத்துக்கும் ஏன் முடிச்சு போடறேள்? வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும்?

நான் பாஷையில் தோய்ந்து போனேன்; வாயின் வரம்பு தோற்ற மோனத்தில் தித்தித்த சொல்லில் தோய்ந்து போனேன்.” (ஏகா)

சமயங்களுக்கேற்ப சொல் கொள்ளும் உருவை அவர் சொல்லும் நேர்த்தி-

அம்மாவின் வார்த்தைகள், சூத்திரங்கள். ஒன்றில்,சமயத்துக்கேற்ப ஒன்பது கருக்கள், அமைப்புகள், வெறும் வர்ண விசிறல்களிலேயே, புரியாவிடினும், தனக்குள் ஒன்றுபட்டதோர் இழைவு போன்று, சம்பந்தா சம்பந்தமற்றவை போன்ற வார்த்தைகளில் வெவ்வேறு ஒலியேற்றங்கள், அர்த்தக் கூடுகள்

சொல்லைச் சொன்னதுமே அதுவாயிடறேன்.”

இந்த ஒரு வாக்கியம் போதும், அவரது சொல்லாட்சியைப் புரிந்து கொள்ள. “’நெருப்பு’ என்று சொன்னால் வாய் வேக வேண்டும்” என்ற அவரது சொற்கூற்று மிகவும் பிரபலம்.

எழுச்சி எண்ணமாகி, எண்ணம் வார்த்தைப்படும் இடைவேளையின் தடங்கள்கூட இலாது, தடங்களின் சிதைவிலாது, தோன்றியது தோன்றியபடி தோன்றிய தருணமே, தனக்கும், தன்னையழைத்தற்குமிடையே பாய்ந்து முறுக்கிய தந்தியே பாஷையாய்..

தருணம் எனும் யாகச் சொல், சிந்து கவி பாடும் விதம். எண்ணுபவர், அதை சொல்லாக மாற்றி வெளியே சிந்துகையில், எண்ணமே தருணமாக, தருணமே எண்ணமாக, இடைவெளியற்று, பொருளும் சொல்லுமாகப் பிணைந்து காட்டும் எண்ணத் தருணம், தருணத்தின் சொற்பொருள்.

சப்தங்கள், மகரந்தப் பொடிகள்; காற்றிலே மிதந்து வந்து என்னை இங்கே இழுத்தன”.

ஓசைத்துளிகள் முத்து முத்தாய் மெத்து மெத்தென எழுந்தன.” ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்திரி). ஓசைகள் இசையாக, வாசமாக, மெத்தென அறியும் நேரம்.. எழுத்தின் தருணம் போலும்.

கரும்பின் இதயம்; இதயத்தின் கரும்பு.. வார்த்தையோடு வார்த்தை சேர்த்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள். உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பது போல். ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர் பாடே உப்புக் கரும்பு தானோ?“ (இதழ்கள்)

அப்பவே, அதுவாகவே, ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபி வேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில், சப்தத்தின் சத்தியத்தில், நா நறுக்கிய வடிவில், சர்வத்தின் நிரூபணத்தினின்றுவாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய், அதன் கதியே என் ப்ரக்ஞையாய், நான் பிதுங்கினேன்

என் தனிமையின் உருவற்றமையாலேயே நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின்  சத்யம். நான் சொல், சொல்லின் பொருள், பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் ஒருங்கே இயங்கும் திரிசூலம்

“அஞ்சலின் அஞ்சலியில் என் அருவிலும் அருவின் உரு ஒடுங்கிப் போனேன். என் உருவின் ஒடுக்கம்; ஒடுங்கலின் உரு.

“?

“கொக்கி குறுகி வளைந்து ப்ரக்ஞை அதில் கருவேறி நெளிந்தது. கேள்வியே பதில், பதிலே கேள்வி. பதிலினின்றும் கேள்வி, கேள்வியால் பதில். பதிலும் கேள்வியும் இதுவா? இல்லை அதுவா? இல்லை பின் எது? ஏது?”

“கேள்வி கேள்வியையே பெருக்கும். கேள்வியால் பயனென்?பதில் ஒன்றே.. கேள்வியையும், பதிலையும் விழுங்கிய ஒரே பதில்.. அதுவும் கேள்வியும் பதிலுடன் மூழ்கிப் போன மோன இருளில் உருவெடுக்கும் ஒளியை…”

“இருளின் மகவு ஒளி. எந்தையும் தாயும் நெஞ்சு நெகிழ்ந்து, ஒன்று கலந்து தம்மை மறந்த தருணம், கருவில் தங்கியதிலிருந்து நான் அமர்ந்த தவத்தில் பொருளாகும் பதத்திற்கு இட்ட மறுபெயர் காலம். தவத்தின் இருக்கை கலையும் சமயங்கள் இறப்பு, பிறப்பு; இரண்டிற்கும் இடையே இரவும் இரவியும் வகுத்த நேற்று, இன்று, நாளை காலம் என்பதே இவ்வளவுதானே”

“எங்குமே தருணம் தங்க முடியாது, தங்க இடம் தேடி, தருணம் தவிக்கும் வியப்பேதான் அதன் தவமோ? தருணத்தின் தவமே நேற்று இன்று நாளை என்று என்றும் ஓயாத கடனைத் தீர்ப்பதுதானோ?

இன்று நேற்று நாளை

தருணத்தின் விஸ்தரிப்பு” (புத்ர)

சொல் என்பதே அவருக்கு ஒரு விசை. “சொல்றது புரியாட்டா, புரிஞ்சுக்கற வரைக்கும் புரிஞ்சிக்காதவாள் கூட செவிடுதான்

என் நெஞ்சில் தெறித்தது வேளையின் முத்து. என் மேல் கமழ்ந்தது வேளையின் மலர்ச்சி. கவிதையே வேளை தன் முழுமை கண்டதன் விளைவுதானே!

தந்திகளின் தன் மீட்டல் போலும் உன் வார்த்தைகள் இருளில் எங்கிருந்தோ மிதந்து வந்தன. புரிந்து விட்டால், பிறகு சொல்லவேதான் என்ன இருக்கிறது?சொன்னால், சொல்லின் சிதைவு பட்டு, உண்மை பொய்யாகிவிடுகிறது.”

வித்தும் வேரும்” இந்த சொல்லாட்சியில் திளைக்கின்றன.

எத்தனைதான் சொன்னாலும் அவர் சொல் மயக்கை, அதன் உயிரை, அது காட்டும் வண்ணக் கோலங்களை, தருணமாகும் சொல்லை, பொருளாகும் தருணத்தை எப்படி விட முடியும்?

சொல்லே பொருளாக எழுத்து. யாகத்தின் அவிர்பாகம்.

வேத நெருப்பிலே ஒடுங்கும் தருணம். கை நீட்டி உண்ணும் அந்த அக்னியின் பிரசாதம் வார்ப்பவனுக்கும், வாசிப்பவனுக்கும் அவரவர் வழி கிடைக்கிறது. தருணம் இவரது யாகச் சொல். கல்லாக உறையும், நீராகத் தழுவும், தென்றலென இசைக்கும், தீயென சுடும், வான் என விரியும். அதுவே, வான் உறைந்த சப்தமென கேட்கும். நீர் கொண்ட தீயெனச் சூழும் , மண் கொண்ட உயிர் என முகிழ்க்கும் மனோரஞ்சிதத்துடன் காற்றெனச் சேரும். என் தருணப் பாடலை நான் இவர் எழுத்தில் கண்டேன். அவர் மொழியில் “உள்ளது கண்டு, கண்டது விண்டு”.

 


Filed under: எழுத்து, பானுமதி ந, விமரிசனம் Tagged: லாஸ்யம் சத்யம் ராகவம்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!