Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

கரை சேர்ந்தோர் காணும் கடல்

$
0
0

– ஜா ராஜகோபாலன்

ja rajagopalan

சமையல் கலைஞர் சுப்ரமணியத்தை வைத்துதான் இக்கட்டுரையை தொடக்க வேண்டியிருக்கிறது. இன்றைய காண்ட்ராக்ட் கலாச்சாரம் வரும் முன்னர் 80, 90களில் நெல்லை பகுதிகளில் சமையல் கலையில் புகழ் பெற்ற கலைஞர். பந்தி பரிமாறுவது அவரது சமையலில் பிரசித்தம். புதுப் பையனுக்கு அவர் கற்றுத் தந்ததை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

“மூணாம் எலைக்கு ஏண்டா சாதம் போடல்ல?”

“அவர் வேணும்னு கேக்கலையே மாமா”

“போடா அறிவு கெட்டவனே ! திருப்தியா சாப்ட்டவன் கைய பின்னுக்க இழுத்துண்டு லேசா பின்னால சாஞ்சிருப்பன். இப்படி பொறங்கைய நக்கிண்டு இருக்க மாட்டான். லஜ்ஜப்பட்டவனாருக்கும். நீதான் பாத்துப் பரிமாறனும். எல பாத்து பரிமாறறதுன்னா எலய இல்லடா அம்பி, ஆளப் பாத்து. தெரியறதா?”

நான் இலக்கியத்தில் சமையல் கலைஞன் இல்லையானாலும் நல்ல சாப்பாட்டு ரசிகன். அவ்விதத்தில் எனது 20 வருட வாசிப்பைக் கொண்டு நானே உருவாக்கிக் கொண்ட சல்லடை வழியேதான் எனக்கான ரசனைத் தேர்வுகளை வரையறுத்துக் கொள்கிறேன். எனது வாசிப்பு, ரசனை அடிப்படையிலேயே இதையும் எழுதுகிறேன். 2000 களின் மத்தியில்தான் எனக்கு சு.வேணுகோபால் வாசிக்கக் கிடைத்தார். மூன்று காரணங்களுக்காக நான் அவரை தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் நிறுத்துகிறேன். முதல் காரணம் அவரது படைப்புகளில் பேசுபொருளை அவர் கையாளும் விதம்.

இலக்கியம் அதன் ஆதிவடிவான குலக்கதைப்பாடல்களாக இருந்த காலந்தொட்டு இன்று வரை சில பேசுபொருட்களை மையமாக வைத்திருக்கிறது. கலைடாஸ்கோப்பின் மாறாத மைய அச்சில் கிடக்கும் சில வளையல் துண்டுகள் சுழற்றலில் விதவிதமான தோற்றவகைகளைக் காட்டுவது போல சில குறிப்பிட்ட மானுட உணர்வுகளே இலக்கியத்தின், படைப்புக் கலைகளின் மாறாத மூலங்கள். குலவரலாறு, வீரம், காமம் போன்ற சில இன்றுவரையில் பேசுபோருட்கள். மொழியும், நாகரிகமும் வளரும் கால மாற்றத்தில் செடி மரமாவது போல இப்பேசுபொருட்களும் கிளை விரித்து வளர்ந்தன. குலவரலாறு தெய்வ வழிபாடாகவும் , வீரம் என்பது லட்சியம், தியாகம் எனும் அளவிலும் , காமம் காதலாகவும் மாறிவந்து பரிணாம வளர்ச்சி காட்டின. இலக்கியம் மேலும் வளரும் காலத்தில் காமத்தின் ஏக்கம் அகப்பொருளாக அமைந்து வந்திருக்கிறது. காமத்தின் பித்துநிலையை பக்தி இலக்கியங்கள் தெய்வத்தின் மீது மடைமாற்றிக் கொண்டன என்றால் அதற்கு முந்தைய சமண இலக்கியங்கள் காமத்தை எதிர்முனையிலிருந்தே அணுகின. ஒரே கள்ளை வெவ்வேறு வடிவ கோப்பைகளில் , வெவ்வேறு நிறங்களில் திகட்டத் திகட்டத் தந்தன சிற்றிலக்கியங்களின் சில வகைப்பாடுகள்.

கவிதைகளின் காலம் முடிந்து உரைநடையின் காலம் வந்தபோது காமம் லட்சியவாதத்தின் முன் அடிக்கடி மண்டியிடவேண்டியிருந்தது. நவீனத்துவம் துலங்க ஆரம்பித்த நாளிலிருந்து காமம் மெல்ல தனியொருவனின் ஆழ்மனப் போராட்டத்தின் இயக்குவிசை எனும் அளவில் இலக்கியத்தில் அதன் இடத்தை அடைந்தது. அந்த இடத்திலிருந்துதான் காமத்தை வேறொரு வண்ணத்தில் கொடுக்க முடியாமல் போனது நம் இலக்கியத்திற்கு. ஒரு கூறுமுறையாக உருவான தாவணி அக்காக்கள், அத்தைகள், சித்திகள் முப்பதாண்டு காலம் நமது இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த அக்காக்களை அறிமுகம் செய்த முதல் வரிசை படைப்பாளிகள் தவிர பிறர் கையாண்ட விதத்தில் அக்காக்கள் விடலைப்பருவ ஆணின் பகல்கனவு தோற்றங்களாகிப் போனார்கள்.

புளித்த பின்தான் கள் என்றாலும் அதீதப் புளிக்கவைப்பு அடுத்த கட்டமாக இருந்தது. எல்லைகளை மீறும் காமங்கள் கருப்பொருளாகின சிலகாலம். நிழலுருவ நிர்வாணம் காட்டி சென்றன பல படைப்புகளும். வெளிப்படையிலான வகையில் காமத்தின் திரிபுகளைப் பேசத்தலைப்பட்டன சில படைப்புகள். ஆதி உணர்வு மொழியில் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியாத நிலையில்தான் 90 களின் படைப்பாளிகள் அந்த நகர்த்தலை செய்யத் தலைப்பட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளாக ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் சு.வேணுகோபால், ஆகியோரைத்தான் சொல்வேன்.

சு.வேணுகோபால் எனக்கு அறிமுகமானது கூந்தப்பனை வழியே . அதிலிருந்து முன்னும், பின்னுமாய் அவரை வாசித்து அறிந்துகொண்டேன். “பிறகு பாறைப்பள்ளத்தில் நீர் வற்றவேயில்லை” என்ற கடைசிக்கு முந்தைய வரியை கூந்தப்பனையில் வாசித்தபோது நெடுநாட்கள் கழித்து காட்டுநெல்லியின் துவர்ப்பினிப்பு வாசிப்பில் ஊறி வந்தது. மீண்டும் ஒரு முறை கீழிருந்து மேலாக கதையை வாசித்துப் போனேன் . சு.வேணுகோபால் என்ற அருமையான கதைசொல்லியை அப்படித்தான் கண்டுகொண்டேன்.

தமிழிலக்கியத்தின் 1970 தொடக்கி 2000 வரை வெளியான முக்கிய படைப்புகள் அனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்தோமானால் அவற்றில் பெரும்பான்மையும் நிறைவேறா காதல்களின் ஏக்கங்களை, காமத்தால் பீடிக்கப்பட்ட, முறைசாரா உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்களை மட்டுமே பேசியிருப்பதாக உணர்கிறேன். மிகச் சிலரே அதைத்தாண்டி செயல்பட்டிருக்கிறார்கள். பேசக்கூடாத பொருளென சொல்லவில்லை.ஆனால் தொடர்ந்து வாசிக்கையில் சில கேள்விகள் மனதில் எழுந்தன . இவ்வளவு சிக்கலானதாகவா இருக்கிறது காமத்தின் மீது கட்டப்பட்ட உறவுகள்? அப்படியானால் அதைத் தாண்ட முயலுபவன் நேராக துறவுக்குள்தான் விழ முடியுமா? துறவன்றி இதைக் கடக்க வாழ்க்கை நமக்கு எதையுமே வாய்ப்பாக்கவில்லையா? இக்கேள்விகளுக்கான பதிலை நான் அப்படைப்புகளுக்குள் தேடிக் கண்டடைய முயற்சித்து தோல்வி அடைந்தேன். இந்தக் கேள்விக்கான விடையை சு.வேணுகோபாலிடமிருந்துதான் அறியத் தொடக்கினேன்.

காமம் என்ற பேசுபொருளை சு.வேணுகோபால் கையாளும் விதத்தில் ஒரு மீள்சொல்லல் இருப்பதாக நினைக்கிறேன் . கூந்தப்பனையில் காமத்தை ஆள இயலாதவன் , ஆட்டத்தில் மனைவியைத் தொலைத்தவன் , பால்கனிகளில் பால்திரிபு இல்லாத அர்த்தநாரி, திசையெல்லாம் நெருஞ்சியில் பூக்கும் முன்பே காய்த்துவிட்ட விடலை என சு.வேணுகோபால் படைப்புகளில் வரும் அனைவருமே காமத்தால் ஏதோ ஒரு விதமாக பாதிக்கப்பட்டவர்கள். அந்த பாதிப்பின் இழிவை , விளைவை கணந்தோறும் சந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். எப்படி அந்த நிலையை அடைகிறார்கள் எனும் களம் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதுதான் என்றாலும் சு.வேணுகோபால் தான் கையாளுவது கொதிகலன் என்று உணர்ந்துதான் இருக்கிறார். அவரது கதைமாந்தர்கள் எவருமே தமது திரிபு நிலைக்கு நியாயம் கற்பிப்பதில்லை. அதை வலிந்து மேற்கொள்ளும் பாவனைகளைக் கொண்டிருப்பதில்லை. கதைமாந்தர்கள் முட்செடி உண்ணும் ஒட்டக உவமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதுதான் சு.வேணுகோபாலது பாத்திரப்படைப்புகளின் வெற்றி. காமத்தின் அலைக்கழிப்பால் அதில் ஈடுபடுபவர் மாத்திரம் அல்ல, அவரைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படும் சித்திரம் சு.வேணுகோபால் படைப்புகளில் மீண்டும், மீண்டும் வருவதைக் காண முடியும். அவரது கதைக்களன் அந்தப் புள்ளியிலிருந்துதான் விரிகிறது. காமத்தால் மூழ்கடிக்கப்பட்டோ, ஏமாற்றப்பட்டோ, கைவிடப்பட்டோ நிற்கும் ஒரு கதாபாத்திரம் அவரால் நமக்குக் காட்டப்படுகிறது. அந்த நிலையின் கட்டியங்கள், உச்சங்கள், அதனைச் சந்திக்கும் புள்ளியில் கதாபாத்திரங்கள் எதிர்நோக்கும் நடைமுறை சிக்கல்கள், அதில் பங்குபெறும் பிற மாந்தர்கள் என்ற ஒரு திட்டவட்டமான வரையறைகளோடுதான் சு.வேணுகோபால் படைப்பை நமக்குத் தருகிறார்.

இந்த சுழலில் சிக்கும் கதாபாத்திரங்கள் என்ன முடிவினை நோக்கிப் போகின்றனர் என்ற இடத்தில்தான் சு.வேணுகோபால் கவனிக்கத்தக்க படைப்பாளியாகிறார். எந்த நிலையிலும் ஆதி இச்சையின் ஆடலை வெல்ல முடிவதில்லை சு.வேணுகோபாலின் கதாபாத்திரங்களால். ஆனால் அவர்கள் அனைவருமே ஆட்டத்தின் போக்கை மடைமாற்றிக் கொள்கிறார்கள். குஞ்சுக்கு இரை ஊட்டப் பறக்கும் பறவை “ஆட்டத்தில்” கதையை முடித்தால், ஜெயராணியின் மகன் பிஞ்சு விரல்களால் ஆல்பர்ட்டின் கண்ணீரைத் துடைத்துதான் “இரட்சணியம்” கிடைக்கிறது. ரயிலடியில் குழந்தையோடு விடைபெற்றுச் செல்லும் கிட்ணனின் ” இன்னொரு ஜென்மம் வேனாண்கா ” என்ற குரலோடுதான் பால்கனிகள் கனிகின்றன. ஊற்றுக்கண் திறக்கும் செழுமையில்தான் செழிக்கிறது கூந்தப்பனை. காமத்தின் அலைக்கழிப்புகள் கொண்டுசேர்க்கும் கரையாக கனிவும், தாய்மையும்தான் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களுக்குத் தெரிகிறது. காமக் கடும்புனலில் சிக்கிக் கொண்டவர்கள் கரையேறும் நிலமாக விரிந்த மனதையும், கருணை ஊறும் தாய்மையையும்தான் அவர்கள் கண்டடைகிறார்கள். அப்படி ஒரு ஒளிமிக்க எதிர்காலமல்லாத இருளை சு.வேணுகோபால் நமக்குத் தருவதில்லை. தன்னாலும், இயற்கையாலும் தன்மீது செய்யப்பட்ட அனைத்து அழுத்தங்களையும் மீறி மானிடம் எப்படி இன்னும் தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்கிறதோ அப்படியே சு.வேணுகோபால் படைப்புகளும். அறுக்கப்பட்ட அடிமரத்தின் ஓரத்தில் துளிர்க்கத் தொடங்கும் சிறு துளிரைக் காட்டாமல் முடிவதில்லை.

இரண்டாவது காரணமாக நான் முன்வைப்பது அவரது பாத்திரப்படைப்புகளுக்காக. சு.வேணுகோபாலின் பாத்திரங்களில் இரண்டு கூறுகளை நாம் பொதுவாகக் காணமுடியும். முதலாவதாக அவரது கதைமாந்தர்கள் “பொலிகாளைகளோ” அல்லது “பால் பசுக்களோ” அல்லர். பூக்கும்வரை தன்னைக்காட்டாமல் நெல்லோடு களையாக வளரும் கோரை எனதான் அவரது கதைமாந்தர்களின் திரிபு பேசப்படுகிறது. தாம் அப்படி ஆகிவிடுவதை அந்தக்கதாபாத்திரங்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் படுகிறது. எல்லாம் சரியாகத் தொடங்கியும் “ஆட்டத்தில்” கனகம் தடம் மாறும் தருணம் எது என்ற மாய வினாடியின் விளக்கத்தை சு.வேணுகோபால் நமக்கு சொல்வதில்லை . அந்த மர்மத்தின் வசீகரத்தை வாசகனிடமிருந்து முற்றிலும் ஒதுக்கித் தள்ளுகின்றனர் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள். அந்த மர்மத்தை விலாவரியாகப் பேசும் விதம் அவரது கதாபாத்திரங்களுக்குக் கிடையாது. அவரது கதைமாந்தர்கள் தமது “அனுபவங்களை” விரிவாகப் பேசுவதேயில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களுக்கு எழும் அறச்சிக்கல்களோ , அகக் குழப்பங்களோ படைப்பின் பேசுபொருட்கள் அல்ல. நிகழ்ந்தவற்றின் விளைவுகளை மட்டுமே எதிர்நோக்கும் அவரது கதைமாந்தர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு சற்று புதியவர்கள்தான் . வாழ்வின் முடிவற்ற புதிர்பாதையில் அவர்கள் எதிர்கொள்ளும் மேலும் சிக்கலான ஒரு முட்டுச்சந்தை அவர்கள் கடக்கும் விதத்தில்தான் கதை நகர்கிறது. கத்தி மேல் நடக்கும் வித்தைதான்.

இரண்டாவது கூறாக சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள் காமத்தை எவ்விதத்திலும் வரையறை செய்யவோ , விளக்கவோ , வகைப்படுத்தவோ முயற்சிக்காதவர்கள். இன்னும் சொன்னால் அதை புனிதப்படுத்தவும் கூட அவர்கள் முயற்சிப்பதில்லை. ஆழ்மனதின் அக இருட்டு என்ற விதத்திலோ , ஆதி இச்சையின் புனிதம் என்ற விதத்திலோ காமம் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களால் கையாளப்படுவதில்லை. வேறெந்த உணர்வும் கூட அதீத முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் நடந்து போனவற்றின் மீதான எண்ணச் சிதறல்களை ஓடவிட்டுக் கொண்டே தமது முன் நிற்கும் வாழ்வை நோக்கிப் பேசும் கதைமாந்தர்கள் . பண்பாடு, கலாச்சாரம் , மரபு போன்ற எந்த மயிர் பிளக்கும் விவாதங்களும் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்களுக்கு இல்லை. எறும்பின் கடலை ஒரே எட்டில் தாண்டிவிடும் மனிதன் போல அவர்கள் ஒரே தாவலில் ஒளியும், காருண்யமும் நிறைந்த அடுத்த படிக்கு தாவிவிடுகிறார்கள். அவர்களை அப்படித் தாவ உந்தும் புள்ளிகளில்தான் சு.வேணுகோபாலும் கச்சிதமாக கதையை முடிக்கிறார். குளித்து ஈரத்துடன் நிற்கும் குழந்தைகளின் நினைப்போடுதான் ஆட்டம் நினைவில் நீடிக்கும். குழந்தையை மார்போடணைத்துக் கொண்டு அதைப் படிக்க வைக்கும் கனவுடன் ரயிலடியில் கிட்ணன் பிரிந்து செல்லும் காட்சிதான் பால்கனிகளில் நம் மனதில் தைத்து நிற்கும். “அழாத மாமா, அம்மா அழுது ” என்று பிஞ்சு விரலால் ஆல்பர்டின் கண்ணீர் துடைக்கும் ஜெயராணியின் மகன்தான் இரட்சணியத்தில் நம் நினைவை ஆக்கிரமிக்கப்போவது. எவ்விதத்திலும் சு.வேணுகோபாலின் கதாமாந்தர்கள் அவர்கள் செய்த செயலாக நம் எண்ணத்தில் நீடிக்கப் போவதில்லை. அவர்கள் செய்யப்போகும் செயல்வழியேதான் நம் நினைவில் நீடிக்கிறார்கள் . அதை உருவாக்கிய விதத்தில் சு.வேணுகோபால் கவனிக்கத்தக்க படைப்பாளியாகிறார்.

மூன்றாவது காரணமாக நான் நினைப்பது சு.வேணுகோபாலின் எழுத்து நடை. உவமைகள், படிமங்கள் , உருவகங்கள் போன்ற இலக்கிய நுட்பங்கள் வழியே படைப்பை நகர்த்திச் செல்லும் புனைவிலக்கியத்தின் எழுத்துமுறைக்கு சு.வேணுகோபால் பரிச்சயமில்லாதவராகத்தான் தெரிகிறார். அவரது எழுத்து நடையும் கூட எவ்வித கதை சொல்லும் உத்திக்குரிய ஒன்றாகவும் இருப்பதில்லை. காட்சிப்படுத்துதல், உரையாடல்கள் ஆகிய இரண்டும்தான் அவரது எழுத்து நடையின் பெரும்பான்மைக் கூறுகள். ஒன்றிலிருந்து மூன்று, மூன்றிலிருந்து ஒன்பது என தாவிச் செல்லும் எழுத்து நடை அவருடையது. தேர்ந்த வாசகன் இடையில் இருக்கும் விடுபடல்களை தானே நிரப்பித் தொடர்கிறான். சு. வேணுகோபால் வெகு வேகமாக உச்சியை அடைந்துவிடுவது இந்தத் தாவல்கள் மூலம் என நினைக்கிறேன் . ஒரு இடம் சொன்னால் சரியாக இருக்கும். ஆட்டம் படைப்பில் வேறொருவனுடன் ஊர்சுற்றி வரும் மனைவியை வீட்டின் வாசலில் வைத்து அடித்து நொறுக்குகிறான் வடிவேல். ஒரு பத்தி முழுவதும் அவள் வாங்கும் அடிகளைச் சொல்லி அடுத்த பத்தி ஒரே வரியில் முடிகிறது -” உயிரை மாய்த்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை”. முதல் பத்தியை விட பெரிதாக ஆகிவிடுகிறது இந்த ஒரு வரி . இந்தத் தாவல்கள்தான் சு.வேணுகோபாலின் எழுத்து நடையாக அவரது படைப்புகள் அனைத்திலும் கிடைக்கின்றன.

காட்சிப்படுத்துதலுக்கு அவர் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் இரண்டு விஷயங்களையே. நிலக்காட்சி அமைப்புகளும், வேளாண்பயிர் வயல்களும். அவரது அசாதாரணமான நுண் தகவல்கள், அவை கதையோடு பொருந்தி கதையின் குறியீடாக மாறுமிடம் அனைத்தும் இந்த இரு விஷயங்களின் வழியேதான் நடக்கின்றன. நிலம் எனும் நல்லாள் படைப்பில் குமரனின் மரணம் காட்சிப்படுத்தப்படும் இடம் சூரியகாந்தி பூத்த , நீர் பாயும் வயல். அவனை எழவொட்டாது சரிப்பது மண்தான். வயல்களும், பயிர்களும் , மரங்களும் , பாறைகளும், பனைகளும் நிறைந்த பல நிலக்காட்சிகள் அவரது அனைத்துப் படைப்புகளிலும் கிடைக்கும். ஆனால் படைப்பின் குறியீடாக அந்த நிலக்காட்சிகளை , வயல்களை மாற்றிக் கொள்வதில் சு.வேணுகோபாலின் வெற்றி இருக்கிறது. மொட்டை வெயிலில் , அனலுமிழ்ந்து கிடக்கும் பாறை அடியில் இருக்கும் நீரூற்றைக் கண்டு , குலை தள்ளும் தென்னையை செழிக்கச் செய்கிறான் கூந்தப்பனையின் நாயகன். இப்படி சமகால கதைசொல்லல் முறையில் குறியீடுகளை வளைத்துக் கொண்டுவரும் உத்தி வெகு சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது.

இப்படியான கூறுமுறை , வர்ணனைகள், கதை மாந்தர் , பேசுபொருள் , எழுத்து நடை என துலங்கும் சு.வேணுகோபால் தாவல்களை ஒரு நல்ல உத்தியாகவே பயன்படுத்துகிறார் என்றாலும் அவையே சிறிய தடைகளாகவும் தோன்றுகின்றன . பெருநாவல் ஒன்றுக்கான களத்தில் அவர் புக முடியாமல் போவது இதனால்தானோ என்று தோன்றுகிறது.

எவ்வாறாயினும் , லஜ்ஜைப்பட்டவனுக்கு பரிமாற ஆயிரம் படைப்புகள் இருக்கும் காலத்தில், திருப்தியாய் உண்டு கையை பின்னுக்கு இழுத்து சாய்ந்தவனுக்குப் பரிமாற சு. வேணுகோபாலைப் போல வெகு அரிதான சில படைப்பாளிகளே இருக்கிறார்கள் . அவ்வரிசையில் இன்று சிறப்பான படைப்பூக்கத்துடன் இருக்கும் சு.வேணுகோபால் தமிழின் என்றும் தவிர்க்க இயலா படைப்பாளிகளில் ஒருவர்தான்


Filed under: எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், ஜா ராஜகோபாலன்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!