Quantcast
Channel: பதாகை
Viewing all articles
Browse latest Browse all 1152

கவியின்கண்- “வேண்டாம்”

$
0
0

எஸ். சுரேஷ்

வேண்டாம்

எனக்கு மிகவும் வயதாகி விட்டது என்பதால் அல்ல,
மிகவும் கிழடு தட்டி விட்டது என்பதால் அல்ல-

வேண்டாம் என்று நான் சொல்வது,
ஆம் என்பதால் எதுவும் கிடைக்காமல்
மேலும் உக்கிர தனிமைதான் மிஞ்சும்
என்ற அச்சமே காரணம்

– சீமாட்டி கி னோ வாஷிகா

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – கிரெய்ம் வில்சன்

காதலைச் சொல்லியபின் பதிலுக்கு காத்திருத்தல் ஒரு வாதையாக இருக்க வேண்டும். எனக்கு அது பற்றி நேரடியாக எதுவும் தெரியாது, காதலைச் சொன்ன அனுபவம் இல்லை.. ஆனாலும்கூட ஒன்று நிச்சயம். தன் காதலைத் தெரிவித்து சம்மதத்துக்குக் காத்திருக்கும் ஒருவன் உன் நண்பனாக இருந்தால் உனக்கும் காதல் ஒரு வாதையாக இருக்கும். ஓரிரு நண்பர்கள் விஷயத்தில் இந்த அனுபவம் இருப்பதால் இது உண்மை என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியும்.

பிரச்சினை என்னவென்றால், காதலைச் சொன்னவன் கணக்கில்லாத சூழ்நிலைகளைக் கற்பனை செய்து கொள்கிறான்- அவற்றை உண்மையாக எடுத்துக் கொண்டு தன் நண்பர்களிடம் தொடர்ந்து தீர்வு கேட்க ஆரம்பித்துவிடுகிறான். இப்படிதான் ஒரு முறை நான் ஒரு நண்பனிடம், நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள், என்று அறிவுரை சொன்னேன். அதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டு அடுத்த சில நாட்கள் தனிமையில் சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தான். ஆனால்கூட அவனால் ரொம்ப நாளைக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. மனதில் புதிய கற்பனை உதித்ததும் அந்த மாதிரி நடந்து விடுமா, அப்படி நடந்து விட்டால் நான் என்ன செய்வேன், என்று கேட்டுக்கொண்டு ஓடி வந்துவிட்டான்.

என் நண்பன் தன் காதலைச் சொன்ன கணத்திலிருந்து அவனது காத்திருப்பு நீண்டுகொண்டே சென்றது (கடைசியில் அவள் சம்மதித்தாள்). ஆனால் இப்போதெல்லாம் காதலர்கள் சுலபத்தில் உணர்ச்சி வசப்படுவதில்லை- ஆற அமர யோசித்துதான் முடிவெடுக்கிறார்கள். என்னோடு வேலை செய்திருந்த ஒருவருடன் சமீபத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது அவர் தன் மகன் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதாகவும், அதை வெகுகாலம் மறைத்து வைத்திருந்ததாகவும் சொன்னார். நீ எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறாயா, என்று பலமுறை அவர் கேட்டிருக்கிறார், நீ அவளைத் திருமணம் செய்து கொள், பிரச்சினையில்லை என்றுகூட சொல்லியிருக்கிறார். ஆனால் மகன், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றே சாதித்து வந்திருக்கிறான். அப்புறம் கடைசியில் ஒரு வருஷம் போனபின், தான் காதலிக்கும் விஷயத்தைச் சொல்லி, அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்லியிருக்கிறான். இத்தனை நாள் இதை ஏன் சொல்லவில்லை, என்று என் நண்பர் கேட்டதற்கு, திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று இருவரும் யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னானாம் அவன்.

அந்தக் காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சில காலம் பழகியவுடன் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வார்கள், அல்லது உறவை முறித்துக் கொள்வார்கள். அப்படிச் செய்யாவிட்டால் ரகசியமாகச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட அவசியம் இல்லை. பொதுவாக அப்போதெல்லாம் காதலைச் சொன்னால் சரி என்று பதில் வரும் என்று நம்ப முடிந்தது. இருவரில் ஒருத்தருக்காவது திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. இதில் தயக்கம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் தனிப்பட்ட காரணமாக இருப்பதைவிட சமூகம் சார்ந்த விஷயங்களாகதான் இருக்கும். திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புக் கொள்வார்களா, கல்யாணம் நல்லபடி நடக்குமா, உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருந்தது. எனக்குத் தெரிந்து ஒரு ஜோடி ஏழு வருடம் காதலித்த பின்னரே கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது. எப்போதோ அவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராகி விட்டனர், ஆனால் தத்தம் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைக்க ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!

ஆனால் இப்போதெல்லாம் இளைய தலைமுறையினர், பிடித்திருந்தால், எல்லா இடங்களுக்கும் சேர்ந்தே போகின்றனர், ஆனால் திருமணம் செய்து கொள்வது குறித்து மௌனம் சாதிக்கின்றனர் என்பது பெற்றோருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இங்கே யாரும் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிப்பதும் இல்லை, காத்திருப்பதும் இல்லை. நாம் ஒருவரையொருவர் விரும்புகிறோமா இல்லையா என்று இருவரும் சந்தேகப்பட்டுக் கொண்டு, இந்த இணக்கம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று பார்த்துவிட்டு, அதற்குப் பின்னரே தனக்கு தகுந்த துணையாக இருப்பார்களா என்று முடிவெடுப்பதுபோல் தெரிகிறது.

இளைஞர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதை அடைவதற்கான பொருளாதார சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. முன்னெல்லாம் ஒருவர் வருமானத்தில் குடும்பமே வாழ வேண்டியிருந்ததால் இது போன்ற சுதந்திரம் இருந்ததில்லை.. இப்போது இந்தப் பொருளாதாரச் சுதந்திரம் போதாதென்று பணியிடத்தில் வளர்ச்சியடைவதற்கு திருமணம் குடும்பம் போன்ற பந்தங்கள் முட்டுக்கட்டையாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்கிறார்கள். எப்போது திருமணம் செய்வது, யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பதை முடிவு செய்வதில்கூட வேலை வாய்ப்பு வசதிகள் கணக்கில் வருகின்றன. எனவேதான் நிரந்தர உறவு பற்றி எந்த முடிவும் எடுக்காமல் சுமுகமாகப் பழகும் ஜோடிகளை நாம் அதிகம் பார்க்க முடிகிறது. “ஓ காதல் கண்மணி” படத்தில் மணிரத்னம் இது போன்ற உறவுகளைச் சித்தரிக்க முயன்றார்.

இன்னொரு விஷயம். எல்லாரும் தனிக்குடித்தனம் என்பதால் அம்மா அப்பாவைச் சம்மதிக்க வைத்தால் போதும் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இதற்குப் பழகிப்போய் விட்டார்கள், தம் பிள்ளைகள் காதலிப்பது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் திருமண தயக்கம்தான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. வேறென்ன, உறவு முறிந்தால் பிள்ளைகள் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலைதான். காலம் போய் விடும், ஆண்டொன்று கூடி வயதாகிவிடும். சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரம் குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்ப உறவில் நிலைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னம்கூட இருக்கிறது. எனவே திருமணம் தாமதமாவது கவலைக்கு இடம் கொடுக்கிறது. இதில் வெளியே சொல்ல முடியாத கவலை, காதல் முறிவு திருமணச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய பின்னடைவுதான்.

ஆனால் இந்த விஷயத்தில் நாம் மெல்ல மெல்ல மேற்கத்திய சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு இது நகரிலுள்ள உயர்குடியினரில் ஏற்பட்டுள்ள மாற்றமாக மட்டும் இருக்கிறது என்பது உண்மைதான். பெற்றோர் மனநிலை முழுமையாக மாற வேண்டும். நாம் நம் குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனில் நம்பிக்கை வைக்க வேண்டும். இக்கால இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக, சரியான முடிவெடுப்பார்கள், காதல் முறிவைத் தாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த முடிவெடுத்தாலும் பெற்றோரின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் அம்மா அப்பாவுக்கு சரியான பெண்ணாகவோ பிள்ளையாகவோ இருக்கக்கூடும் என்றெல்லாம் பொருத்தம் பார்த்து ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது நினைத்துப் பார்க்க கடினமான விஷயம்தான். குழந்தைகள் சுயநலமானவர்கள் என்று பல பெற்றோர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.

அதற்காக இப்போதெல்லாம் பெரியவர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்யும் வழக்கம் போய் விட்டது என்று அர்த்தமில்லை. நம் சமூகச் சூழலில், கல்லூரியிலோ வேலை செய்யும் இடத்திலோ, நம் மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது இன்றும் சுலபமில்லை. எனவே, சம்பிரதாய திருமணங்களின் அவசியம் இருக்கவே செய்கிறது. ஆனால் அவற்றின் நடைமுறை மாறிவிட்டது. இப்போதெல்லாம் காதலித்த பெண்ணும் பையனுமே சம்பிரதாய திருமணம் செய்து கொள்கின்றனர். தங்களுக்கு ஏற்ற துணையை திருமண தகவல் தளங்களில் தேடுகின்றனர், பேசிப் பார்க்கின்றனர், மேலே செல்லலாமா என்று முடிவு செய்கின்றனர். அதன்பின் பெற்றோரிடம் சொல்லி ஏற்பாடுகளை முடித்துக் கொள்கின்றனர்.

முன்னெல்லாம், ஜாதகம், குடும்பப் பின்னணி என்று தேடுவார்கள், அல்லது, “எனக்குப் பிடித்ததுதான் வேண்டும்,” என்று சொல்வார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் தெளிவாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன்- நம் நட்பு வட்டத்தில் சரியான துணை கிடைக்காதபோது நவீன வசதிகளைப் பயன்படுத்தி மரபுச் சூழலில் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார்கள். இது தவிர டிண்டர் போன்ற ஆப்புகள் வேறு இளைஞர்களுடன் கைகோர்க்க வந்து விட்டன.

ஏதோ இளைஞர்களின் காதல் ஏற்பாடுகளும் திருமணமும் அறிவார்ந்த செயல்திட்டங்கள் என்பது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன், இது கதையின் ஒரு பகுதிதான். உண்மையில், முடிவெடுப்பதில் உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தக் கவிதையில்கூட சீமாட்டி கி னோ வாஷிகா சொல்வது போல், “மேலும் உக்கிர தனிமையே மிஞ்சும்” என்பதால்கூட ‘சரி’ என்று சொல்லத் தயங்கி, ‘மாட்டேன்’ என்று சொல்லலாம். இத்தனை குறைவான சொற்களில் இவ்வளவு உக்கிரமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் இதுபோன்ற கவிதைகள் மிக அரியவை. இளைஞர்களுக்கு என்னென்ன இலட்சியங்கள் இருந்தாலும், அவர்கள் எத்தனைதான் யோசித்து தீர்மானித்தாலும், பல முடிவுகள் உணர்ச்சிவசப்பட்டு செய்யப்படுபவை. இதனால்தான் எப்போதும் இருப்பதைப் போலவே இப்போதும் மகத்தான இல்லறம், மனமொத்த இல்லறம், சாதாரண இல்லறம், முறிமணம் என்று பலவற்றைப் பார்க்க முடிகிறது.


Filed under: எழுத்து, எஸ். சுரேஷ், விமர்சனம்

Viewing all articles
Browse latest Browse all 1152

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!